விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் பேசிய அக்கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி கேள்வி ஒன்றினை எழுப்பிள்ளார். அது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதுபற்றி இங்கே அறியலாம்...
கூட்டத்தில் பேசிய பாலகிருஷ்ணன், “பாமக தலைவர் ராமதாஸ், கட்சி பொதுக்குழுவில், ‘இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைதான் கேட்க வேண்டும்’ என சொல்கிறார். அப்படியான கட்சி சிபிஎம் இல்லை. இது தொண்டர்களுக்கான கட்சி.
இன்னொருபக்கம், தாமரை மலரப்போகிறது என்று தமிழிசை கூறி வருகிறார். உண்மையில், தாமரை மலரவில்லை; கருகி போய் உள்ளது. அண்ணாமலை நம்புகிற ஆண்டவரே வந்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது” என்றார்.
தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பிய அவர், “ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னாலே காவல்துறை வழக்கு போடுகிறது. மாண்புமிகு மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.
‘தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது? போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?’ எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும்" என கேட்டார்.
இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
பாலகிருஷ்ணனின் இந்த கேள்விகளுக்கு இன்று பதிலளித்துள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “நேற்று முன்தினம் வரையில் இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதார புகழ்ந்தவர்தான் அவர். மகளிர் உரிமை திட்டம் என்றாலும் சரி, விடியல் பயணம் என்றாலும் சரி, புதுமைப்பெண் திட்டம் என்றாலும் சரி முதல்வருடைய செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் அனைத்தையும் புகழ்ந்தவர். அவருடைய நெருடல் என்னவென்று புரியவில்லை. தெரிந்தால் அதற்கு உண்டான பரிகாரத்தை காண முடியும்.
அதேநேரம், எங்களைப் பொறுத்த அளவில் ஜனநாயகப்படி போராடுவதற்கு உரிமை கோருவோருக்கு, எங்களால் முடிந்த அளவிற்கு மறுப்பதில்லை. மக்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த காலங்களை எடுத்துப் பார்க்கின்ற பொழுது 2024 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக போராடியவர்களுக்கு அனுமதி தந்தது போல் வேறு எந்த ஆட்சியிலும் அனுமதி தரப்படவில்லை.
அதேபோல எந்தவொரு கோரிக்கைக்காக போராட்டம் நடந்தாலும், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை அனுப்பி பேசி அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக திராவிட மாடல் அரசு இருக்கின்றது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோடு கலந்து பேசி உடனடியாக அதற்கு நிவாரணம் காணுகின்ற அரசாகவும் இந்த அரசு இருந்து கொண்டிருக்கின்றது. போராட்டங்கள் என்று வருகின்ற பொழுது மக்களுடைய சராசரி வாழ்வு, தினசரி வாழ்வு பாதிக்கப்படக்கூடாது என்பது இந்த ஆட்சியினுடைய எண்ணம்.
மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருப்பதில்லை. அவர்கள்மீது எந்தவிதமான அடக்குமுறைகளோ பயன்படுத்தப்படுவதில்லை. முறையாக வழக்கு பதிந்து அவர்களை மாலைக்குள்ளாக விடுதலை செய்கிறது காவல்துறை. இது சட்டத்தின் ஆட்சி.
அருமை அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்றைக்கு வரை இந்த ஆட்சியை புகழ்ந்து கொண்டிருந்தவர்தான். வருங்காலங்களில் அவர் புகழ்கின்ற அளவிற்கு அவருடைய தேவைகளை நிச்சயமாக செவிசாய்த்து இந்த ஆட்சி நிறைவேற்றும். எல்லோருக்கும் எல்லாம் என்று கூறும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நிச்சயம் இப்பிரச்னையையும் களைவார். மற்றபடி குற்றம்சாட்ட வேண்டும் என்றே குற்றம் சாட்டுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.