சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் இன்று, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு அரசுத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்படி, சென்னையை அடுத்த ஆவடியில் 'நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில், தண்டுரை பகுதி அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுக்கு விடுதிக்கான கட்டுமான பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் நாசர் அதைத் தொடர்ந்து, சிஎஸ்ஆர் நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட அரசு மாதிரி பள்ளியில், புதிய ஆய்வகம் மற்றும் சமையல் கூடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இதையடுத்து, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற "உலகம் உங்கள் கையில்" நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி மாணவர்கள் 4,500 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர், அந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாசர், இந்தியில் வரவேற்பு தெரிவித்ததால் நிகழ்ச்சிக்கு வந்தவுடன் தனது மண்டையில் சுர்ரென்று ஏறியதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது, “இந்நிகழ்வுக்கு வந்தவுடன் எனது மண்டையில் சுர்ரென்று ஏறிவிட்டது. காரணம், என்னை என்.சி.சி மாணவர்கள் வரவேற்று அழைத்து வந்தனர்; ஆனால், அவர்கள் பேசியது எதுவும் எனக்கு புரியவில்லை. அவர்கள் முழுவதும் இந்தியில்தான் வரவேற்பு செய்தார்கள். அந்த வரவேற்பு முறையை மாற்ற வேண்டும். தெலுங்கு, இந்தி, ஒடிசா, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளுக்கு எல்லாம் 52, 56 எழுத்துகள் தான் இருக்கின்றன. உலகப் பொது மொழியான ஆங்கிலத்திற்கே 26 எழுத்துகள் தான். ஆனால், தமிழுக்கு மட்டும்தான் 247 எழுத்துகள் இருக்கின்றன. எனவே, நாம் அந்த திமிரோடு நாம் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.