தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று நிலையில், மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் என்.ஆனந்த் பேசினார். அப்போது அவர், “நீங்கள் எல்லோரும் முதல்வரை திரையில் பார்த்து இருப்பீர்கள். 3 மாதமாக நேரில் பார்க்கிறீர்கள். நான் 30 ஆண்டுகளாக நெருங்கிப் பழகி உள்ளேன். சினிமாவில் மட்டுமே நடிப்பார், வெளியே நடிக்கத் தெரியாது. எல்லாவற்றுக்கும் மேல் அவர் ஒரு நல்ல மனிதர். நான் ஒரு முதல்வர், ஸ்டார் என்ற நினைப்பு அவரிடம் இல்லை. அவருக்கு புகழ்ச்சி பிடிக்காது.
இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் பெயரைச் சொல்லிவிட்டு பொதுச் செயலாளராக என்னுடைய பெயரையும் சொல்வார்கள். இதே வேறொரு கட்சியாக இருந்தால், அடுத்த நாள் நான் பதவியில் இருந்திருக்க மாட்டேன். கடந்த 2 ஆண்டுகளாக யூடியூபில் அவரைத் திட்டாத ஆட்களே இல்லை. ’ஒரு சதவீதம் வாக்குகள் வாங்குவார், 5 சதவீதம் வாங்குவார்’ என பேசுவார்கள். மக்களுக்காகவும், எங்களுக்காகவும் அதை எல்லாம் பொறுத்துக்கொண்டார்.
‘தைரியமாக, சிங்கிளா நிற்போம்; நிச்சயமாக நாம் ஜெயிப்போம்; உனக்கு பயமா இருக்கா’ எனக் கேட்டார். எங்களுடைய நிர்வாகிகளும் சரி, தோழர்களும் சரி, சட்டமன்ற உறுப்பினர்களும் சரி, அமைச்சர்களும் சரி.. ஒரு பக்கம் ரூ.2 கோடியை வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் தலைவர் (விஜய்) படத்தை வைத்தால், தலைவர் படத்தைத்தான் எடுப்பார்களே அன்றி, அந்த 2 கோடியை எடுக்கமாட்டார்கள்” என்றவர், ” ‘சர்கார்’ படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் நீங்கள் (அதிமுக) திரும்பவும் ஆட்சிக்கு வந்திருப்பீர்கள். பேனரை கிழித்ததால்தான் நீங்கள் ஆட்சியை விட்டுவிட்டு இருக்கிறீர்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் நேரத்தில் மட்டும்தான், அந்த 15 நாட்கள் நீங்களா.. நாங்களா என்று பார்க்க வேண்டும். மற்ற 5 வருடங்களும் எங்களோடு இணைந்து மக்களுக்கு என்னென்ன தேவைகள் வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் முதல்வரும், அமைச்சர்களும் ஒத்துழைப்பு கொடுப்போம். அந்த 15 நாள் சண்டைக்குப் பிறகும் நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம்” என்றார்.