அமைச்சர் மதன் ராஜா pt
தமிழ்நாடு

தந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர் மதன் ராஜா.. குவியும் பாராட்டு.!

நெல்லை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மதன் ராஜா தன்னுடைய தந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தது பாராட்டைப் பெற்றுள்ளது.

Rishan Vengai

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்ற தவெக அரசின் அறிவிப்பை நடைமுறையை கடைப்பிடித்து, தந்தை பெருமாளை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இரவு முழுவதும் அங்கு தங்கி சிகிச்சையை கண்காணித்த சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜாவின் நடவடிக்கை, பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சமீபத்தில், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தங்களது உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும், உறவினர்களுக்கும் அரசு  மருத்துவமனைகளிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

முதலமைச்சர் விஜய் - அமைச்சர் மதன் ராஜா

இந்த நிலையில், சிறு, குறு தொழில்துறை அமைச்சரான மதன் ராஜாவின் தந்தை பெருமாள், வயது மூப்பின் காரணமாக திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். முதலில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக நேற்று இரவு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தந்தையை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்த அமைச்சர் மதன் ராஜா, இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து தேவையான சிகிச்சைகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணித்தார்.

மேலும் இன்று காலை தனது மனைவியை தந்தைக்கு உதவியாக மருத்துவமனையில் இருக்க வைத்து பின்னர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

அரசின் அறிவிப்பை நடைமுறையில் பின்பற்றியதுடன், பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக அமைச்சர் மதன் ராஜா செயல்பட்டது பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.