துரைமுருகன்  முகநூல்
தமிழ்நாடு

பறிக்கப்பட்ட பொன்முடியின் பதவி; அடுத்த நிமிடமே துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை!

மாற்றுத்திறனாளிகள் குறித்து தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் திமுகவின் மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான துரைமுருகன். இது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சுக்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பாக திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சரும் திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன், “ நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்து கொண்டு திமுகவை எதிர்க்க பார்க்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகளை விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது .

மாற்றுத்திறனாளிகள் குறித்த இவரது சர்சைப்பேச்சு கடும் விவாதத்தை தூண்டியது. இதனால், மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பாக அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற போராட்டங்களும் எதிர்ப்பு குரல்களும் எழுந்தன

இந்தநிலையில், தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் அமைச்சர் பொன்முடி, மீண்டும் பெண்கள் குறித்து கொச்சையான வார்த்தையை பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் , இன்று காலை பொன்முடியின் துணை பொதுச்செயலாளார் பதவி உடனடியாக பறிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான சிறுது நேரத்திலேயே, மாற்றுத்திறனாளிகள் குறித்து தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் திமுகவின் மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான துரைமுருகன்.

அதில், “ இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்"" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் தளபதி அவர்கள், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும்.அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.