முற்றுகை
முற்றுகை புதிய தலைமுறை
தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் - 30% தொழிலாளர்களுக்கு மெமோ!

ஜெனிட்டா ரோஸ்லின்

6 அம்ச கோரிக்கைக நிறைவேற்றக் கோரி 2 ஆம் நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் 45 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்துத் துறை சார்பில் “போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே போராட்டதில் ஈடுபட வேண்டாம். அப்படி ஈடுபட்டால் போராட்டத்தினை ஏற்படுத்தக்கூடிய தொழிலாளர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கடந்த 6 ஆம் தேதி எச்சரிக்கப்பட்ட போதிலும் அதனை மீறி 2 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தொழிலாளர்கள்.

இதையடுத்து அரசாங்கத்தின் அறிவிப்பினை மீறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற அடிப்படையில், 30 சதவீத தொழிலாளர்களுக்கு மெமோ அனுப்புவதற்கான நடவடிக்கையில் போக்குவரத்துத்துறை இறங்கியுள்ளது. அதன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மெமோ கிடைக்கப்படும் ஊழியர்கள் ஒருவார காலத்திற்குள் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்துவரும் நிலையில், தொமுச, ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தினர் மட்டும் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். முதல் நாளான நேற்று தமிழகத்தில் 40 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை என சிஐடியூ சங்க தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

வேலை நிறுத்தம்

இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், பொதுமக்களுக்கு போதிய பேருந்து சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக தற்காலிக ஓட்டுநர்களும் பேருந்துகளை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில இடங்களில் விபத்து ஏற்படுவதாக குற்றம்சாட்டும் எழுந்துள்ளது. இதற்கிடையே சில இடங்களில் போராட்டத்தின் ஈடுபடும் தொழிலாளர்கள் கைதும் செய்யப்படுகின்றனர்.

இயங்கும் பேருந்துகளின் நிலவரம்:

இப்படி போராட்டங்கள் அடுத்தகட்ட தீவிர நிலையை அடைந்தநிலையில் 9, 12 மணி நிலவப்படி தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் நிலவரம் குறித்து காணலாம்.

9 மணி நிலவரப்படி:

தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 97.92 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதாவது 15,728 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையை பொறுத்தவரை 99.29% மாநகர பேருந்துகளும், 3,233 பேருந்துகளில் 3,210 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துத்துறை தகவல் அளித்துள்ளது.

12 மணி நிலவரப்படி

இதுவே தமிழகத்தில் மதியம் 12 மணி நிலவரப்படி 98.36 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுகின்றன என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.