செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறையில் முதலமைச்சர் பிறந்தநாள் மற்றும் சட்டப் போராட்டத்தில் வென்ற முதல்வருக்கு பாராட்டு, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக கழக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசிக் கொண்டிருந்தபோது, கடுமையான காற்று வீசத் தொடங்கியது. இதனால் பொதுக் கூட்டத்தில் இருந்த பெண்கள் வெளியேறினர். இதைத் தொடர்;ந்து பலத்த காற்று வீசியதால் மேடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் சரிந்து ஆ.ராசா பேசிக் கொண்டிருந்த மைக் மீது விழுந்தது. இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஆ.ராசா உடனடியாக மைக்கை விட்டு விலகிச் சென்றதால் காயங்களுமின்றி மயிரிழையில் தப்பினார்.
இதையடுத்து தொடர்ந்து வீசிய பலத்த காற்றால் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்திற்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் காற்றில் பறந்தன. இதைத் தொடர்ந்து ஆ.ராசா, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் விழா மேடையில் இருந்து பாதுகாப்பாக புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.