மதுரை முகநூல்
தமிழ்நாடு

மதுரை | விதி மீறி இயங்கும் கல்குவாரிகள்.. அம்பலப்படுத்திய இளம் சமூக ஆர்வலர் மீது கொடூர தாக்குதல்!

விதி மீறி இயங்கும் கல்குவாரி குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் மீது கடுமையாக தாக்குதல் அரசு மருத்துவமனையில் அனுமதி

PT WEB

மதுரையில் உரிமம் இன்றி கல்குவாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலம் படுத்திய இளம் சமூக ஆர்வலர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் உரிமம் முடிந்தவையும் பல உள்ளன. இவ்வகையில், வாடிப்பட்டி பகுதியில் உரிமம் முடிந்தும் தொடர்ந்து செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

கோப்பு படம்

இங்குள்ள கச்சைகட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இப்பகுதி வகுத்துமலை வனப்பகுதியை ஒட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாக குவாரிகள் பல செயல்பட்டு வருகின்றன. குவாரிகளுக்கு வாகனங்கள் சென்று வர தனிப்பாதைகள் இன்றி நீர்வரத்து ஓடை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள தென்னை மரங்கள், பசுந்தீவனங்கள் உள்ளிட்ட விவசாயம் பாதித்துள்ளது.

இந்தநிலையில்தான், ராமையன்பட்டி பகுதியில் உரிமம் முடிந்த சில குவாரிகள் பலமாதங்களாக இரவு பகலாக கற்களை உடைத்து ஏற்றிச் செல்வதாகவும், இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை எனவும் அதே கிராமத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஞானசேகரன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்றிருந்தார்.

ஞானசேகரன்

இதைத்தொடர்ந்து புதிய தலைமுறையில் செய்தி விரிவாக வெளியிடப்பட்டிருந்தது. மேலும், இதுக்குறித்து சமூக அறிவியல் ஞானசேகரன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கல்குவாரி ஊழியர்கள் ஞானசேகரனை கடுமையாக தாக்கி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த ஞானசேகரன் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு தற்பொழுது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில். சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் ,இதுக்குறித்து தெரிவித்த காவல்துறையினர் பிரச்சனைக்குரிய நபர் யார் என்று அடையாளம் காணப்பட்டதாகவும், தற்பொழுது அவர் மது போதையில் இருப்பதால் விரைவில் அவரை கைது செய்யும் நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

இந்தநிலையில், ஞானவேலை தாக்கிய கல்குவாரியின் லாரி ஓட்டுநர் முருகன் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.