குற்றவாளி  விஜய்
குற்றவாளி விஜய் pt desk
தமிழ்நாடு

கோவை: பிரபல நகைக்கடை கொள்ளையில் முக்கிய குற்றவாளி கைது; கொள்ளையன் சிக்கியது எப்படி?

PT WEB

கோவை காந்திபுரம் 100 அடி வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 28-ம் தேதி 4.6 கிலோ (575 சவரன்) தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. நகைக் கடைக்குள் இருந்த இரண்டு அடி இடைவெளியைப் பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைள்

இச்சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் விசாரணையில்,  தர்மபுரியைச் சேர்ந்த விஜய் என்பவர் கொள்ளை  சம்பவத்தில் ஈடுபட்டதும், அவர் சமீபகாலமாக, பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை பகுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு விஜயின் மனைவி நர்மதா மற்றும் அவரது மாமியார் யோகராணி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து விஜயின் மனைவி நர்மதாவிடமிருந்து நவம்பர் 30-ம் தேதி 3.2 கிலோ தங்க  நகைகளைப் பறிமுதல் செய்து  நர்மதாவை கைது செய்தனர்.

விஜயின் மாமியார் யோகராணி

இதனைத்தொடர்ந்து தனிப்படையினர் தர்மபுரி மாவட்டம், தும்பலஹள்ளியில் உள்ள இலங்கை அகதிகள்  முகாமிலிருந்த விஜயின் மாமியார் யோகராணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நகைகளைக் குப்பைத் தொட்டியிலும், சாலை ஓரத்திலும் புதைத்து வைத்திருந்த நிலையில்  அவற்றையும் தனிப்படை போலீசார் மீட்டனர் .

இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி தர்மபுரி மாவட்டம், தேவரெட்டியூரில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த விஜய், வீட்டில் 38 கிராம் நகையை வைத்துவிட்டுச் சென்றதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விஜயின் தந்தை முனிரத்தினத்திடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 6ம் தேதி இரவு விஜயின் தந்தை முனிரத்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயின் மனைவி நர்மதா

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை மீட்கப்பட்ட நிலையில் விஜய் தொடர்ச்சியாக தலைமுறைவாக இருந்து வந்தார். ஐந்து தனிப்படை போலீசாரும் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதியில், ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்த வேடத்தில் விஜய் சுற்றி திரிவதாகத் தனிப்படைக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார் காளகஸ்தியில் இருந்து சென்னை வரும் வழியில் விஜயை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜய் தற்பொழுது தனிப்படை போலீசாரால் கோவை அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் விஜய்யிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் நடைபெற்று 12 நாட்களுக்குப் பிறகு கொள்ளையன் விஜய் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்

இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபரான விஜய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நகைக் கடையில் இருக்கும் இடைவெளி குறித்து அவருக்குத் தகவல் சொன்ன நபர் யார் ? இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடும் பணியில் தனிப்படை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.