சென்னை உயர்நீதிமன்றத்தின் 36-வது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவியேற்றார். இவரது பதவிக்காலம் மார்ச் 5ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்தச் சூழலில்தான், அடுத்த தலைமை நீதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில், 37-வது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கேரளா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவரின் உத்தரவிற்குப் பிறகு, இவர் பதவியேற்றுக்கொள்ள உள்ளார்.
தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் மற்றொரு முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் ஒருவர், பதவியேற்கவிருக்கும் 2 மாதங்களுக்கு முன்னதாகவே, அந்த தன்மைப் புரிந்துகொள்வதற்காக பணியிட மாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவின்படி, ஏப்ரல் 25-ஆம் தேதி ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள பஞ்சாப் நீதிமன்ற நீதிபதி லிசா கில் 2 மாதங்கள் முன்னதாகவே, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் 37-வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். சட்டம் பயின்ற இவர், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் 24 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக பணியாற்றினார்.
தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். இந்தச் சூழலில்தான், தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.