செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணியரசு - தனலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு வேல்முருகன் (26) என்ற மகனும் தேவி (24) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உணவருந்தி விட்டு வெளியே சென்ற வேல்முருகன், பின்பு வீட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று அதிகாலை வேல்முருகன், மயானத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து மணியரசு மற்றும் அவரது உறவினர்கள் வலையங்குளம் மயானத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது வேல்முருகன் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.