முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா pt desk
தமிழ்நாடு

மதுரை | முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா – சுடச்சுட வழங்கப்பட்ட மட்டன் பிரியாணி

திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா. 200 ஆடுகள், 200க்கும் மேற்பட்ட சேவல்கள், 2500 கிலோ அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட பிரியாணி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டி சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பிரியாணி திருவிழாவை வெகு விமர்ச்சையாக நடத்தி வருகின்றனர்.

முனியாண்டி கோயில்

இந்நிலையில், 90 வது ஆண்டாக நடைபெறும் இந்த ஆண்டு பிரியாணி திருவிழா விழாவிற்கு பக்தர்கள் ஒரு வாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொள்வர். இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கோயில் நிலைமாலை ஊர்வலமாக கொண்டு வந்து தேங்காய் உடைத்து பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் தமிழகம்,ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல இடங்களில் ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் வெளியூர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட சேவல்களை முனியாண்டி சுவாமிக்கு பலியிட்டு 2500 கிலோ அரிசியில் பிரியாணி தயார் செய்தனர். இதையடுத்து அண்டா அண்டாவாக தயார் செய்த பிரியாணியை சனிக்கிழமை காலை கருப்பசாமிக்கு படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா

இதனைத் தொடர்ந்து தயாராக இருந்த பிரியாணி சுடச்சுட பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட கிராமத்தினர் விடிய விடிய காத்திருந்து பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர்.