உயிரிழந்த நபர்
உயிரிழந்த நபர் புதியதலைமுறை
தமிழ்நாடு

மதுரை - வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்ற கணவன் மரணம்... உடலை கேட்டு என 13 நாட்களாக போராடும் மனைவி!

யுவபுருஷ்

செய்தியாளர் - மதுரை பிரசன்னா

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சின்ன கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரதேவன். சொந்த ஊரில் கூலித்தொழில் செய்து வந்த இவர், குடும்ப சூழல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மற்றும் மேலூரைச் சேர்ந்த தரகர்கள் உதவியுடன் வேலை செய்வதற்காக ரூபாய் 3 லட்சம் பணம் செலுத்தி சுற்றுலா விசாவில் அர்மேனியா நாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற பின், தன்னை அழைத்துச்சென்ற கம்பெனியில் எந்த வேலையும் கொடுக்கவில்லை என்று வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார் வீரதேவன். தான் கேட்ட வேலை கிடைக்காததால், எதாவது வேலைக்குச் செல்வோம் என்று நினைத்த வீரதேவன் சில நாட்கள் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அவ்வபோது மனைவியிடம் வீடியோ காலில் பேசும்போது கடுமையான பனிப்பொழிவால் வேலையும் செய்ய முடியாத சூழல் இருப்பதாக கூறியுள்ளார்.

இப்படியான சூழலில், வழக்கம் போல கணவர் வீரதேவனை செல்ஃபோனில் தொடர்புகொண்டுள்ளார் அவரது மனைவி லட்சுமி. அவர் அழைப்பை ஏற்காததையடுத்து, உடன் இருப்பவர்களுக்கு அழைத்துப்பேசியுள்ளார். அப்போது, வீரதேவன் பணிக்குச் சென்றபோது திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

வீரதேவனின் குடும்பம்

இதையடுத்து மதுரை கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்ற வீரத்தேவனின் மனைவி லட்சுமி, “என் கணவர் அர்மேனியாவுக்குச் சென்று சிக்கிக்கொண்டு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறுகின்றனர். அவரது நிலை குறித்து தெரியவில்லை” என்று புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, அர்மேனியாவில் வீரதேவனுடன் இருந்தவர்கள் லட்சுமிக்கு அழைத்து உங்களது கணவர் இறந்துவிட்டதாக தகவல் சொல்லியுள்ளனர்.

சரி, அவரது உடலையாவது சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டுமே என்று அனுப்பி வைத்த தரகரிடம் பேசியபோது, அவர் மேலும் 5 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கணவனை இழந்த வீரதேவனின் மனைவி, தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

"ஏற்கனவே தரகர்களுக்கு செலுத்திய 3 லட்சம் பணத்திற்கே எந்த பணமும் திரும்பிக் கிடைக்காத நிலையில், உடலை கொண்டுவர மேலும் 5 லட்சம் கேட்கின்றனர். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, என் கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்" என்று பிள்ளைகளுடன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார் லட்சுமி.