madurai high court bench x page
தமிழ்நாடு

”ஜாமீனை ரத்து செய்ய ஏன் மனு தாக்கல் செய்யப்படுவதில்லை” - மதுரை உயர்நீதிமன்றக் கிளை

”தொடர்ச்சியாக பல வழக்குகளில் கொலைக் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்களின் ஜாமீனை ரத்து செய்ய ஏன் மனுத்தாக்கல் செய்யப்படுவதில்லை” என மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

PT WEB

மதுரையைச் சேர்ந்த சபரி காந்தன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் காணாமல் போன 33 வயதுடைய தனது மகன் சுகுமாரை மீட்டு நேரில் ஆஜர்படுத்தக் கோரியும், தன் மகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். சுகுமார் தற்போது குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்தமுறை விசாரணையின்போது, "பல வழக்குகளில் கொலைக் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்களின் ஜாமீனை ரத்து செய்ய ஏன் மனுத்தாக்கல் செய்யப்படுவதில்லை” என கேள்வி எழுப்பி, அது தொடர்பாக தமிழக சட்ட ஒழுங்குப் பிரிவின் உதவி காவல்துறை தலைவர் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

madurai high court

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமரவும் முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக சட்ட ஒழுங்குப் பிரிவின் உதவி காவல்துறை தலைவர் தரப்பில், "குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்களின் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பான சுற்றறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30ஆம் தேதி வரை ஜாமீன் ரத்து செய்வது தொடர்பாக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 355 ஜாமீன் மனுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜாமீன் ரத்து செய்யக் கோரிய 790 மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 1,181 மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன" என தெரிவிக்கப்பட்டது. மேலும், “ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீன் நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விசாரணை அலுவலரால் அது கண்காணிக்கப்பட்டு, அது தொடர்பான அறிக்கை தமிழக காவல்துறை தலைவருக்கு அனுப்பப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசுத் தரப்பில் கூடுதல் விபரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள், வழக்கு தொடர்பாக நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.