ருக்மணி பழனிவேல்ராஜன்
ருக்மணி பழனிவேல்ராஜன் pt
தமிழ்நாடு

"கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக்கூடாது என்று ஆகம விதிகளில் எங்கு இருக்கிறது?" - நீதிபதி காட்டம்!

PT WEB

செய்தியாளர்: இ.சகாய பிரதீபா

மதுரை கோச்சடையைச் சேர்ந்த தினகரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் "மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் ஒவ்வொரு நிகழ்விலும், ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படும். விழாவின் 8ம் நாளான பட்டாபிஷேகம் அன்று, அலங்கரிக்கப்பட்ட குடையின் கீழ் செங்கோல் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு, மீனாட்சியம்மனின் கைகளில் ஒப்புவிக்கப்படும். அந்த செங்கோலை உரிய நபர் பெற்றுக்கொள்வார். பாதுகாப்பு கருதி பெரும்பாலும் கோவிலின் அறங்காவலர் குழு தலைவரே செங்கோலை பெற்றுக்கொள்வார்.

ஆகம விதியின் படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக் கொள்ள இயலாது. தற்போது மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் ராஜன். அவர் கணவரை இழந்தவர் என்பதால் கோவிலின் விதிகளை பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. கோவிலின் செயல் அலுவலரும் திருமணமாகாதவர் என்பதால் அவரிடமும் செங்கோலை வழங்க இயலாது. ஆகவே மூத்த உறுப்பினரான அனந்தகுல சதாசிவ பட்டர் தகுதியான நபராக இருப்பதால் அவரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "இதுபோன்று தொடரப்பட்ட மனுக்களை ஏற்கனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து பேசிய நீதிபதி, "திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது?" என கேள்வி எழுப்பினார்.

மேலும், "கோவிலினுள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ள கடைசி நேரத்தில் வழக்கை தொடர்ந்திருப்பது ஏன்? இந்தக் காலத்திலும் இதுபோல கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல” என்று வழக்குத்தொடர்ந்த தினகரனுக்கு காட்டமாக கேள்வி எழுப்பினார். அத்தோடு, வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருக்கும் ருக்மணி, அமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.