varun kumar ips, saatai duraimurugan, trichy surya PT
தமிழ்நாடு

டிஐஜி வருண்குமார் மீது சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு

திருச்சி DiG தலைவர் வருண்குமார் தனது பதவியை தவறாக பயன்படுத்துவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கு. தமிழக டிஐஜி சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: இ.சகாய பிரதீபா

2 மொபைல் போன்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்:

நாம் தமிழர் கட்சியின் கொள்கைபரப்புச் செயலர் சாட்டை துரை முருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி குற்றப்பிரிவு காவல் துறையினரால் கடந்த ஆண்டு என்மீது பொய்யாக பதியப்பட்ட வழக்கில், என்னை கைது செய்ததோடு எனது 2 மொபைல் போன்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நான் ஜாமீனில் வெளியே சென்ற பின்பும், எனது போனை என்னிடம் வழங்காததால் அது தொடர்பாக நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி வழக்கு தாக்கல் செய்திருந்தேன்.

சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோக்கள்:

இந்நிலையில் ஜூலை 14ஆம் தேதி எனது போனில் இருந்த ஆடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. அதன் பின்னரே திருச்சி மண்டல காவல்துறை தலைவராக இருக்கும் வருண்குமார், அவரது பள்ளித் தோழரான திருச்சி சூர்யாவிடம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எனது போனில் இருந்து ஆடியோக்களை வழங்கியதும், திருச்சி சூர்யா அவரது சமூக வலைதள கணக்கில் அந்த ஆடியோக்களை பதிவேற்றம் செய்ததும் தெரியவந்தது.

காவல்துறை அலுவலர்கள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை குறிப்பிட்டு பேசிய வருண்குமார்:

அதோடு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் திருப்பதி ஆகியோரை கைது செய்து அவர்களை அடித்து துன்புறுத்தி, 20 பெண் காவலர்களைக் கொண்டு அவர்களை தாக்கி, கட்சியின் தலைவருக்கு எதிராக வாக்குமூலம் வழங்குமாறு துன்புறுத்தியுள்ளனர். இதனால் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிறை அலுவலர்களாலும், நீதித்துறை நடுவராலும் அந்த காயங்கள்க் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு அனைத்திந்திய காவல்துறை அலுவலர்கள் கூட்டத்தில் வருண்குமார் நாம் தமிழர் கட்சியை குறிப்பிட்டு பேசியவை சமூக வலைதளங்களில் பரவியது.

Trichy District SP Varunkumar

நாம் தமிழர் கட்சி குறித்து அவதூறு:

இதன் மூலம் ஆளும் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு நாம் தமிழர் கட்சியை நசுக்க முயல்வது தெரிய வருகிறது. இது அவர் வகிக்கும் பொறுப்புக்கு எதிரானது. எனது செல்போனை பறிமுதல் செய்தது, அதிலிருந்த ஆடியோக்களை சட்டவிரோதமாக எடுத்து, அவரது நண்பர்கள் மூலமாக சமூக வலைதளங்களில் பரவ விட்டது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக தாக்கியது, நாம் தமிழர் கட்சி குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்டவை அவர் ஒரு தலைபட்சமாக இருப்பதை உறுதி செய்கிறது.

ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காவல்துறை தலைவர் மற்றும் திருச்சி காவல் ஆணையருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே தனது பதவியை தவறாக பயன்படுத்தும் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் வருண்குமார் மீது எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

court order

மனு மீது நீதிமன்றம் உத்தரவு:

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், "சாட்டை துரைமுருகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள், அவதூறு வழக்குகள் உள்ளன. இவர், இதே செயலில் தான் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், காவல்துறை உயர்அதிகாரி மீது, குற்றம்சாட்டப்பட்டவரே புகார் கொடுப்பது ஏற்புடையது அல்ல. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுதாரரின் மனுவை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து 1 மாதத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.