நீதிபதி சுவாமிநாதன்
சச்சின் - அஞ்சலி
நீதிபதி சுவாமிநாதன் சச்சின் - அஞ்சலி pt desk
தமிழ்நாடு

மரங்களுக்கு இடையேயான திருமண வழக்கு: சச்சின் - அஞ்சலி தம்பதியரின் வயதை மேற்கோள் காட்டிய நீதிபதி

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

கரூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில, கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் பஞ்சமாதேவி புதூரில் அருள்மிகு ஆனூர் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அடுத்த வாரம் அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைக்க நாள் குறிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்துக்கு தடை விதித்தும், பழனிச்சாமியின் ஸ்ரீஆனூர் அம்மன், ஸ்ரீ முனியப்பசாமி அறக்கட்டளை பதிவை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

Madurai High court

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில்... “அருள்மிகு ஆனூர் அம்மன் கோயிலில் அரசு மற்றும் வேம்பு மரங்களுக்கு அடுத்த வாரம் நடைபெறும் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு மனுதாரர் இரு காரணங்களை சொல்கிறார். அரச மரத்தை ஆணாகவும், வேப்ப மரத்தை பெண்ணாகவும் கருதுகின்றனர். வேப்பம் மரம் அரச மரத்தை விட வயது முதிர்ந்தது. இதனால் இந்த திருமணம் நடைபெறக்கூடாது என்கிறார். மற்றொன்று மரங்களுக்கு திருமணம் நடைபெறும் நாள் நல்ல நாளில்லை, அதனால் அன்று திருமணம் நடைபெறக் கூடாது எனக் கூறியுள்ளார்.

மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பதை புனிதமானதாக நான் கருதுகிறேன். நிகழ்வுடன் தொடர்புடைய பக்தி மற்றும் மதத்தை மறந்து விடுவோம். ஆனால், மரங்கள் இயற்கையின் ஒரு அங்கம், மரங்கள் இல்லாவிட்டால் ஒரு நொடி கூட நம்மால் இருக்க முடியாது. பீட்டர் வோல்பென் என்பவர் மரங்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை, மரங்கள் என்ன உணர்கின்றன, மரங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பது குறித்து புத்தகம் எழுதியுள்ளார். அதில் மரங்களுக்கிடையிலான காதல் மற்றும் இனச் சேர்க்கைக்கான தனி அத்தியாயம் உள்ளது.

மரங்களுக்கான திருமணத்தை மரங்களின் வயது வித்தியாசத்தை காரணமாக கூறி தடுக்க முயல்வதை ஏற்க முடியாது. வயது வித்தியாசம் அடிப்படையில் ஆட்சேபம் தெரிவிப்பது காலாவதியான அணுகுமுறை. பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி, சச்சினை விட 6 வயது மூத்தவர்.

Sachin Tendulkar with wife Anjali Tendulkar and daughter Sara Tendulkar

அடுத்தபடியாக, மரங்களின் திருமணம் நடைபெற தேர்வு செய்யப்பட்டுள்ள நாள் நல்ல நாளில்லை என்கிறார் மனுதாரர். நீதிமன்றம் எல்லா விஷயங்களிலும் தலையிட முடியாது. இதனால் 18.3.2024 முதல் 20.3.2014 வரையில் நடைபெறும் ஏழு திங்கள் சீர் விழாவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அடுத்தது, அறக்கட்டளை. இந்த ஸ்ரீ ஆனூர் அம்மன் அறக்கட்டளை 2016-ல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் பொதுக்கோயில் இல்லை. கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்த குறிப்பிட்ட குடும்பத்தினர் கும்பிடும் கோயில் அது. அருள்மிகு ஸ்ரீ ஆனூர் அம்மன், ஸ்ரீ முனியப்பசாமி திருக்கோயில் அறக்கட்டளை 27.1.2024-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை ரத்து செய்ய முடியாது. புதிய அறக்கட்டளையின் முகவரியாக 2016-ல் பதிவு செய்யப்பட்ட முதல் அறக்கட்டளையின் முகவரியே காட்டப்பட்டுள்ளது. முதல் அறக்கட்டளையின் அடையாளம் இல்லாமல் புதிய அறக்கட்டளையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

judgement

முதல் அறக்கட்டளை உறுப்பினர்கள் பிரிந்துள்ளனர். அதில் உள்ளவர்கள்தான் புதிய அறக்கட்டளையை தொடங்கியுள்ளனர். பிரிந்தவர்கள் அரச மரமும், வேப்ப மரமும் போல் ஒன்றிணைய வாழ்த்துகள். இப்பிரச்னைக்கு உரிமையியல் நீதிமன்றத்தில்தான் தீர்வு காண முடியும். ரிட் மனுவில் தீர்வு காண முடியாது. மனு முடிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.