செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் துவங்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், 870 படுக்கை வசதியுடன் மருத்துவமனை, 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பறை கட்டடம், ஆய்வகக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கட்டுவதற்காக ரூ.1,624 கோடியாக அறிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான முழு நிதியும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜெய்கா நிறுவனத்தின் மூலம் பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கட்டுமானப் பணிகளுக்கான நிதி தற்போது மத்திய அரசு நிதியுடன் சேர்த்து ரூ.1977.80 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் 21 கோடி மதிப்பீட்டில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகளும் நிறைவடைந்துள்ளது.
எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் தென் மாவட்ட மக்களுக்கு கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணியை தனியார் கட்டுமான L&T நிறுவனம் சார்பில் முதற்கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை சமன் செய்யும் பணிகளை தொடங்கினர். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
950 படுக்கைளுடன், பத்து தளங்களுடனும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ள நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ மூலம் கேட்டதில் தகவல் வெளியாகிய நிலையில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் கழுகு பார்வை புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது