அரசுப்பள்ளி மாணவர்கள் FILE IMAGE
தமிழ்நாடு

மதுரை: கீழே அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மரம் விழுந்து விபத்து! அரசுப்பள்ளி அவலம்!

மேலூரில் அரசுப் பள்ளியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயின்ற போது மரம் வேரோடு சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

PT WEB

மதுரை மாவட்டம் , மேலூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தால் 8,9,10 ஆகிய ஆகிய வகுப்புகள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வேரோடு சாய்ந்த மரம்

இந்தநிலையில், இன்று அரையாண்டு தேர்வு என்பதால், மதியம் நடைபெற உள்ள தேர்வுக்காக இன்று காலை 9 ஆம் வகுப்பு மாணவ- மாணவியர் 42 பேர் மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்று வீசியதால், அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மாணவர்கள் மீது விழுந்துள்ளது.

மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த 17 மாணவ- மாணவியருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தலைமையாசிரியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அருகிலிருந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாணவ- மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் வட்டாட்சியர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காயமடைந்த மாணவர்கள்

மரத்தடியில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் நிலையைக் கவனத்தில் கொண்டு புதிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.