உயர்நீதிமன்றம், செந்தில்பாலாஜி
உயர்நீதிமன்றம், செந்தில்பாலாஜி file image
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

Angeshwar G

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது.

செந்தில்பாலாஜி

இதய அறுவை சிகிச்சை செய்துள்ளதால் உடல்நலனை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இதனை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வந்தார். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் ஆதாரங்களை அழித்துவிடுவார் என அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு, இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த வழக்கு விசாரணையின் போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “மருத்துவக் காரணங்களைக் கூறி ஜாமீன் கோர முடியாது. செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்ட்ரைவில் இருந்த தகவலின் அடிப்படையில் வேலை பெற்றவர்கள் ரூ.67 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கொடுத்துள்ளார்கள்.

அதேபோல் சிறை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சிகிச்சை இல்லாத போது மட்டும்தான் ஜாமீன் கோர முடியும். ஆனால் செந்தில்பாலாஜிக்கு அதுபோன்ற அவசியம் ஏற்படவில்லை. மருத்துவமனையிலோ அல்லது அரசு மருத்துவமனையிலோ சிகிச்சை பெறலாம்.

கால் மறத்துப் போவதாக செந்தில்பாலாஜி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தையும் ஏற்கக்கூடாது. அறுவை சிகிச்சை நடந்தது முதல் அவருக்கு அந்த பிரச்னை இருந்துள்ளது. ஆகவே தற்போது ஜாமீனுக்காக அதை கூற முடியாது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

போக்குவரத்து துறைகளில் வேலை வாங்கு தருவதாக கூறி பணம் பெற்ற நபர்களில் அவரது சகோதரர் அசோக்குமார் முக்கிய நபராக இருக்கிறார். தற்போதுவரை அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பிருக்கிறது” என தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி தரப்பில், “அவர் சாட்சியங்களை கலைக்க மாட்டார். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.