மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 62(5)ன் படி, சட்டப்பூர்வ காவலில் சிறையில் உள்ளவர்களும், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டவர்களும் வாக்களிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டவர்களும், தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களும் வாக்களிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடார், தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பில், ஹரிநாடாருக்கு எதிராக மூன்று குற்ற வழக்குகள் உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 62 உட்பிரிவு 5ன் படி, சட்டப்பூர்வ காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களும், குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களும் வாக்களிக்க முடியாது. இந்த சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதால், வாக்களிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறி, ஹரிநாடாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.