R.K. suresh
R.K. suresh PT
தமிழ்நாடு

ஆருத்ரா மோசடி விவகாரம்: சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேஷ்-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

PT WEB

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை நாட நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே. சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அந்த சம்மனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது

இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கை பொருளாதார குற்றப்பிரிவு முடக்கியது. முடக்கத்தை நீக்கக் கோரி ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, “ஆரூத்ரா மோசடி விவகாரத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பில்லை, வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளேன்” என ஆர்.கே.சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில், “ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வங்கி கணக்கு முடக்கம் தொடர்பாக தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேஷ்க்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.