அஜித்-பிரீத்தா
அஜித்-பிரீத்தா  PT WEP
தமிழ்நாடு

"பாத்ரூம் கூட போக முடியவில்லை" - பாதுகாப்பு கேட்டு எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!

PT WEB

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள சே.அகரம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர் சிவில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செங்கல்பட்டு மாவட்டம், சித்தரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரீத்தா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

எஸ்.பி அலுவலகத்தில் அடைந்த காதல் ஜோடி

இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரீத்தாவின் தந்தையான அசோக்குமார், அஜித் வீட்டிற்குச் சென்று அஜித்குமாரின் தாய் அன்னபூரணி மற்றும் அஜித்தின் அண்ணன் சத்தியமூர்த்தியை காரில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணலூர்பேட்டை ஆற்றின் அருகில் வைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பிரீத்தா மற்றும் அஜித் தனது குடும்பத்தினரோடு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டுத் தஞ்சமடைந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பிரீத்தா, "நான் மேஜராகிவிட்டேன் என்னுடைய விருப்பத்திற்கு மாறாக என் வீட்டில் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள். அதனால் நான் வீட்டை விட்டு வெளியே வந்து அஜித்தை திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய சொந்த விருப்பத்தில் தான் வந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருந்தோம். என்னுடைய தந்தை மற்றும் அவருடன் 2 ஆண் காவலர்கள், 2 பெண் காவலர்கள் வந்து என்னுடைய மாமியார் மற்றும் கணவரின் அண்ணன் ஆகிய இரண்டு பேரையும் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர். எங்களால் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியவில்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.