மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக நேற்றைய தினம் தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகம், கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்...
போராட்டக்களத்திலேயே தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்த சண்முகம் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் கிராமத்தில் பிறந்தார். காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரியில் படித்த அவர், 1979இல் மாணவர் சங்கத்தில் இணைந்தார். அப்போதிருந்தே தீவிர மாணவர் அரசியலில் இயங்கியவர்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுநேர ஊழியராக செயல்பட்ட பெ.சண்முகம், 1992 ஆம் ஆண்டு உருவான மலைவாழ் மக்கள் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராக தேர்வானார். பழங்குடியினர் நிலவுரிமை போராட்டத்தை முன்னெடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வனவுரிமை சட்டம் சாத்தியப்பட காரணமாக இருந்தார்.
தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு தலைமையேற்று பாஜக அரசிற்கு எதிராக போராட்டத்தை வழிநடத்தியவர். வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தில் நீதிமன்றத்தில் போராடி வனத்துறை அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்ததில் சண்முகத்துக்கு பங்குண்டு.
62 வயதாகும் சண்முகம் தற்போது சென்னை ஆவடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.