இடதுசாரிகள் Pt web
தமிழ்நாடு

2 தொகுதி இடைத்தேர்தல்.. தவெக திமுகவுக்கு ஆதரவு இல்லை.. இடதுசாரிகள் எடுத்த அதிரடி முடிவு!!

தராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் ஆதவளிக்கவில்லை என அறிவித்துள்ள இடதுசாரிகள், தனித்து வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

நடந்து முடிந்த சட்டப்பேரவை சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதேசமயம், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 6 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இதனால், திருச்சி கிழக்குடன் சேர்த்து 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவிர்த்த மற்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதித்தது நீதிமன்றம்.

தேர்தல் ஆணையம்

இந்தச்சூழலில் தான், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுகான இடைத்தேர்தலை தற்போது தேர்தல் அறிவித்திருக்கிறது. அதன்படி, அக்டோபர் 6-ம் வாக்குப்பதிவும், 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற விருக்கிறது. கடந்த 9-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், தவெக, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன.

அதேசமயம், தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, தங்களது கூட்டணிக்கு ‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ எனப் பெயர் வைத்ததுடன், 2 தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாகவே கூறப்பட்டது. இந்தச்சூழலில் தான், தவெக வெளியில் இருந்து மட்டுமே ஆதரவளித்து வரும் மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு ஆதரவளிக்குமா? அல்லது திமுக ஆதரவளிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கும் என்பது குறித்து இருகட்சிகளும் நிர்வாகிகள் குழுக் கூட்டம் நடத்தியிருந்தன. இதையடுத்து, முடிவு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச்சூழலில் தான், வரவுள்ள இடைத்தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கு ஆதரவு இல்லை எனவும் தாங்கள் தனியாக வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகவும் தெரிவித்து தமிழக இடதுசாரிகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். அதன்படி, தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் என ஆளுக்கு ஒரு தொகுதியில் போட்டியிடவிருக்கிறது.

இதுகுறித்து, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் தனித்தனியாக அளித்துள்ள பேட்டியில், இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு இல்லை. இதனால் திமுகவுக் ஆதரவு என்று அர்த்தம் இல்லை. தனித்துக் களம் காணும் இடதுசாரிகளுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். அதேசமயம், தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும் எனத் தெரிவித்துள்ளனர். இந்தச்சூழலில் தான், வரவுள்ள இடைத்தேர்தல் ஐந்துமுனைப் போட்டியுடன் மேலும் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது.