இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீவிர ஆலோசனை!!
2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக, வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து வெளியேறினர். குறிப்பாக, கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால், திருச்சி கிழக்குடன் சேர்த்து 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவிர்த்த மற்ற தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருந்ததால், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதித்தது நீதிமன்றம்.
இந்தச்சூழலில் தான், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, ஆளும் தவெக சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். , தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா போட்டியிடுகிறார்.
திமுக சார்பில், மதுராந்தகம் (தனி) தொகுதியில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும், தாராபுரம் (தனி) தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில், மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் கே.பானுமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையில், தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவளித்த காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெக தலைமையிலான கூட்டணியில் இணைந்து விட்ட நிலையில், இடதுசாரிகள் தவெக கூட்டணியில் இன்னும் இணையவில்லை. அண்மையில் நடந்த கூட்டணி கூட்டத்திற்கு கூட செல்லவில்லை. இதையடுத்து, தற்போதைய இடைத்தேர்தலில் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் பொதுத்தேர்தலின் போது, கூட்டணியில் இருந்த திமுகவுக்கு ஆதரவளிப்பார்களா? அல்லது தவெக கூட்டணிக்கு ஆதரவளிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான், வரும் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கலாம் என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் மு. வீரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் முடிவு தெரிய வரலாம் என கூறப்படுகிறது.
அதேசமயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
