தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக கூட்டணியில் பாஜகக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவிநாசியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் போட்டியிடுவது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன்(ஏப்ரல் 6) முடிவடைகிறது. 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ள திமுக தொடர்ச்சியாக 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேபோல, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறார். அதன்படி, 169 இடங்களில் அதிமுக நேரடியாக களம் காணும் நிலையில், மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு 27 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது.
எனினும் அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகளில் சிலவற்றை மாற்றித் தரக்கோருவது, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மேலிடம் அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப்போய் வந்த சூழலில் தான், நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌதரராஜன், கோவை வடக்கில் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் அவிநாசியில் எல். முருகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ள எல். முருகன் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் தான் இன்று, வானதி ஸ்ரீனிவாசனுடன் இணைந்து மத்திய இணையமச்சர் எல். முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் மீண்டும் மாநில அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், இது என்னுடைய முடிவல்ல, கட்சியின் முடிவை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துவது தான் சாதாரண தொண்டனின் பணி. எங்கள் கூட்டணியின் ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது தான். மத்தியிலும், மாநிலத்திலும் என்.டி.ஏ (டபுள் என்ஜின் சர்கார்) கூட்டணியின் ஆட்சி அமைவதன் மூலமே, தமிழ்நாடு அடிப்படை கட்டமைப்பு உயரும். தமிழக மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள் எனப் பேசினார்.
2020ஆம் ஆண்டு பாஜகவின் மாநிலத் தலைவராக பதவியேற்ற எல். முருகன், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டார். அத்தேர்தலில், 88,593 வாக்குகள் பெற்றிருந்தாலும், திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டே மத்திய இணையமச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரின் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பு முடிவுக்கு வந்தது. இந்த சூழலில் தான், 2026 தேர்தலில் அவிநாசி (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவதன் மூலம் மீண்டும் மாநில அரசியலுக்கு எல். முருகன் வந்துள்ளார்.