செய்தியாளர்: மணிகண்டபிரபு
பெருங்காமநல்லூர் தியாகிகள் 105வது நினைவு நாளையொட்டி நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்....
பெருங்காமநல்லூர் சம்பவம் வரலாற்றில் துளி செய்தியாக கூட இல்லை. வீர தீர மக்கள் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசிய அரசு அமைந்தால் பெருங்காமநல்லூரில் உயிர்நீத்த மாயக்காள் பெயரில் மகளிர் கல்லூரி தொடங்கப்படும். அதேபோல பூலித்தேவன், வேலுநாச்சியார் என தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேவர் இன வாக்குகள் தங்களுக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையாலே புறக்கணிக்கப்படுகிறார்கள்.
செல்வப்பெருந்தகை பேசுவது வேடிக்கையாக உள்ளது:
கச்சத்தீவு குறித்து பேசியே ஆக வேண்டும். கடலுக்கு நடுவில் உள்ள கச்சத் தீவில் தண்ணீர் இல்லை என கூறுகிறார்கள். செல்வப்பெருந்தகை பேசுவது வேடிக்கையாக உள்ளது. தண்ணீர் இல்லை கொடுத்தோம் என சொல்கிறார்கள். இது தான் காரணமா? கச்சத்தீவை மீட்கப் போராடுவோம் என 4 கட்சிகளும் தற்போது நாடகம் போடுகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் அம்மன் கோயில் திருவிழாவில் நடத்தப்படும் நாடகம் போல இதனை அரங்கேற்றி வருகின்றனர்.
கச்சத்தீவு தீர்மானம் என்பது அர்ப்ப நாடகம்:
46 ஆண்டுகளாக மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் கட்டாமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள். தேர்தல் நேரம் என்பதால் இன வாக்குகளை குறிவைத்து வாக்குறுதிகள். வாக்கை பறிக்க தற்போது கச்சத்தீவு தீர்மானம் என அர்ப்ப நாடகம் நடத்தி வருகிறார்கள். கச்சத்தீவை மீட்கட்டும் ஒரு பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம். 18 ஆண்டுகள் இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த ஒரு மாநிலக் கட்சி திமுக.
தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது:
வாஜ்பாய், குஜ்ரால், விபி சிங், தேவகவுடா மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கூட்டணியில் இருந்துள்ளது. அப்போதெல்லாம் தீர்மானம் நிறைவேற்றி கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் திமுக எடுக்காமல் இப்போது தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். நாம் தமிழர் கட்சி மீனவர் பிரச்னைக்கு தொடர்ச்சியாக போராட்டங்கள் மீனவர் படுகொலையின் போது அந்த மக்களை சந்தித்து பேசி உள்ளது. அதன் விளைவாக மீனவர் வாக்கு நமக்கு கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் தற்போது தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் வக்ப் நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன:
வக்ப் நிலத்தில் என்ன பிரச்னை உள்ளது. தற்போது நாட்டில் எவ்வளவோ சிக்கல்கள் உள்ள நிலையில் இது போன்ற பிரச்னைகள் தேவையா. திராவிட மாடல் ஆட்சியில் வக்ப் நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு அரங்கை வக்ப் நிலத்தில் திறந்து விட்டுள்ளார். ஜாகிர் உசேன் கொலை வக்ப் வாரிய நிலம் தொடர்பாக நடந்ததுதான். இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தி ஒரு தரப்பு மக்களின் வாக்கை குவிக்க போராடுவது இந்த நாட்டின் இறையாண்மை, ஒற்றுமைக்கு தீங்கு ஏற்படுத்தும் என்று சீமான் பேசினார்.