சென்னை மெட்ரோ பராமரிப்பு பணிகள்... டெல்லி மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் - காரணம் என்ன?
செய்தியாளர்: பால வெற்றிவேல்
சென்னை நகரில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை ஏற்கனவே மெட்ரோ ரயில் 44 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. நகரை வடக்கு - தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் இணைக்கும் வகையில் 118 கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டாவது கட்ட மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாவது கட்ட மெட்ரோ பணிகள் முடிவடைந்ததும் ரயில்கள் இயக்கவும் பராமரிப்பதற்கான ஒப்பந்தம் டெல்லி மெட்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ரூ.5870 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர். விகாஸ் குமார் இடம் நேற்று வழங்கினார். ஒப்பந்தத்தின் படி இரண்டாம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள், மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உட்பட இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்த காலம், இரண்டாம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியில் இருந்து 12 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக மெட்ரோ சேவையை இயக்கிய அனுபவம் வாய்ந்த டெல்லி மெட்ரோ நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் இயக்கம் பராமரிப்பு வழங்கியுள்ளது சேவையின் திறனை மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது.