தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய், இன்று பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் முதல் கையெழுத்திட்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தேசிய கீதத்திற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டதும், தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக இசைக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் சோழவந்தான் தொகுதி (தனி) எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவி பிராமணம் செய்து வைத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடும் நிலையில், தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா முன்னிலையில் புதிதாக தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.
இந்தசூழலில் தான், தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு நிகழ்வின் போது வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்கு அடுத்ததாக (மூன்றவதாக) தமிழ்த்தாய் வாழ்த்து பாடியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, இன்று காலை நடைபெற்ற முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தற்காலிக ஆளுநர் பதவியேற்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டிருப்பது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.