ஆளவந்தான் ரீ ரிலீஸ்
ஆளவந்தான் ரீ ரிலீஸ் புதியதலைமுறை
தமிழ்நாடு

ஆளவந்தான் ரி ரிலீஸ்.. மதுரை திரையரங்கில் தலையில் சூடம் ஏற்றி கொண்டாடிய ரசிகர்கள்!

யுவபுருஷ்

நடிகர் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2001ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது ஆளவந்தான் திரைப்படம். ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுதாசன் சரத்பாபு, பாத்திமா பாபு ,ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படத்தில், கமல்ஹாசன் நாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடத்தில் வெவ்வேறு தோற்றங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 8ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியானது.

மதுரை பழங்கானத்தம் பகுதியில் உள்ள APR ஜெயம் திரையரங்கில் ரசிகர்கள் ஆட்டம் ஆடி பட்டாசு வெடித்து கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். ரசிகர்கள் சிலர் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு சவால் விடும் வகையில் ஒலிக்கப்பட்ட கமலஹாசனின் பாடலுக்கு ஆட்டம் ஆடியும், தலையில் சூடம் ஏற்றியும் கொண்டாடி தீர்த்தனர்.

இதனிடையே திரையரங்கிற்கு வந்த நடிகர் ரோபோ சங்கர் திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கமலஹாசன் உருவப்படம் பெறிக்கப்பட்ட பேனருக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டிய அவர், குடும்பத்தோடு ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தார்.

அப்போது பேட்டியளித்த அவர், ”அன்பிலும் சரி, அராஜகத்திலும் சரி மதுரை மக்களை யாரும் மிஞ்சமுடியாது. செல்லும் இடமெல்லாம் ஆளவந்தான் படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்” என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.