செய்தியாளர்: ஆறுமுகம்
உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தற்போது இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராமர் (72), அவரது பேரன் சூர்யா (26) மற்றும் பாலி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் காசிலிங்கம் ஆகிய மூவரும் மழையில் நனையாமல் இருப்பதற்காக புளியமரத்து அடியில் நின்றுள்ளனர்.
அப்பொழுது இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக புளிய மரத்தின் மீது இடி விழுந்துள்ளது இதில், இடிதாக்கி ஓய்வு பெற்ற தலைமை காவலர் காசிலிங்கம் மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் சூர்யா என்ற இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது