கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி - பரமேஸ்வரி தம்பதியரின் மகனான அண்ணாமலை, கோவையில் பொறியியல் படிப்பை முடித்தார் அண்ணாமலை. அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். 2011-ஆம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐபிஎஸ் அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கிய அவர், கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்தல், இரவு நேர ரோந்து எனச் சட்டவிரோத செயல்களுக்கு எதிராகச் சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் பொதுமக்கள் மத்தியில் "கர்நாடக சிங்கம்" என்று அன்போடு அழைக்கப்பட்டார். உடுப்பி மற்றும் சிக்மளூரு மாவட்ட எஸ்பி-யாகவும், பெங்களூர் தெற்கு மாவட்ட துணை ஆணையராகவும் (DCP) திறம்படப் பணியாற்றினார்.
"போலீஸ் பணி என்பது கடவுளுக்கு நெருக்கமான பணி" என்று குறிப்பிட்ட அண்ணாமலை, கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்றபோது ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் சக அதிகாரியின் மறைவு தந்த சுயபரிசோதனை காரணமாக, மே 2019-ல் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அரசியலைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் ‘வீதி லீடர்’ என்ற அமைப்பைத் தொடங்கிச் சமூகப் பணியாற்றினார். மேலும் இயற்கை விவசாயம், நாட்டு மாடுகள் வளர்ப்பு ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டினார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க நினைத்தபோது, அவரது மனதில் இருந்த முதல்வர் வேட்பாளர் அண்ணாமலைதான் என்ற பேச்சுகளும் அரசியல் அரங்கில் பரவலாக இருந்தது. வலதுசாரி சிந்தனைகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்று வந்த அண்ணாமலை, 2021-ஆம் ஆண்டு ஜூலை 8-ல் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்து, தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றார்.
கடந்த 4 ஆண்டுகாலம் (2021 - 2025 வரை) தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்த இவர், கட்சியின் வளர்ச்சிக்காக 'என் மண் என் மக்கள்' போன்ற பல்வேறு பாதயாத்திரைகள் மற்றும் வியூகங்களை வகுத்துச் செயல்பட்டார். இவரது தலைமையிலேயே தமிழக பாஜக 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.