டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு web
தமிழ்நாடு

”தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்..” - மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு!

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக போராடிவரும் மாணவர்களுக்கு ஆதரவாக தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என ஜோதிகா பதிவிட்டுள்ளார்..

Rishan Vengai

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து இளைஞர்கள் மாதக்கணக்கில் போராடி வரும் நிலையில், மாணவர்களின் அடிப்படை உரிமை கோரிக்கைக்கு ஆதரவாக நடிகை ஜோதிகா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, இன்ஸ்டாகிராமில் உணர்ச்சி மிகுந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடந்துவரும் இப்போராட்டம் மாணவர்கள், காவல்துறையினர் இடையேயான மோதலாக மாறியது. இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசுதல் போன்ற தாக்குதலால், 6 வயது சிறுவன் உட்பட 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.

டெல்லி மாணவர்கள் போராட்டம்

இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், டெல்லி மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டாக்காரர்களுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் நடிகை ஜோதிகா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்த அவருடைய பதிவில், “தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள். நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் பொறுப்புணர்ச்சியுடன் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்; ஒரு சீர்திருத்தக் கல்விக்காக நிற்கிறேன்.

தடையின்றி வெளிப்படையாக இருக்கும் Gen Z தலைமுறையினரே, உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.

சோனம் வாங்சுக், அபிஜீத் திப்கே மற்றும் சௌரவ் தாஸ், தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களைப் போல வளர்க்க விரும்புகிறோம்; எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சி.ஜே.பி" என்று பதிவிட்டுள்ளார்.