சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தமிழ் மொழியின் தொன்மையை வலியுறுத்தி, 3500 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழி குறித்து பேசினார். அவர், தமிழன் எந்த மொழியையும் எதிர்க்காமல் விரும்பி படிக்கிறான் என்றும், மற்றவர்கள் ஒரு மொழியை திணித்தால் அதை ஏற்கமாட்டேன் என்றும், மொழிக்கு இழுக்கு வரும்போது குரல் உயர வேண்டும் என்றும் கூறினார்.
செய்தியாளர் - வி.எம்.சுப்பையா
சீர்மிகு சட்டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்றம் மற்றும் ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி சென்னை தரமணியில் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.
மாணவர்களின் தமிழ் வழக்காடு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் பெரும்பாலும் தமிழில் நடைபெற்று வருவதை மையமாக கொண்டு நடத்தப்பட்ட வழக்குரை போட்டியின் இறுதிச்சுற்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடந்தது.
இறுதிச்சுற்று போட்டிக்கு பிறகு நடந்த நிறைவு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன், ராகேஷ் சட்ட அறக்கட்டளை தலைவரும், நாடாளுமன்ற திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், மாதிரி வழக்காடு மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே. பாலாஜி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் கௌரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ”1000 ஆண்டுகளை கடந்த மொழிகள் 10 மட்டுமே இருக்கும். அப்படி ஆயிரம் ஆண்டுகளை தாண்டாத ஆங்கிலத்தை பேசி பெருமைப்படுத்துகிறோம். 2000 ஆண்டுகளை கடந்தவை கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி. சமஸ்கிருதம் பேச்சுவழக்கில் இல்லை.
பேச்சு வழக்கில் 2000 ஆண்டுகளை கடந்து இருப்பவை சீன மொழி, தமிழ் மொழி என சொல்லிக்கொண்டிருக்கிறோம். அப்படி நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் கீழடி அகழாய்வில் 3500 ஆண்டுகளை தாண்டி நிற்கின்ற ஒரே மொழி தமிழ் தான் என நிரூபனமாகியுள்ளது.
தமிழன் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை மாறாக விரும்பி படிக்கிறான். என் மொழியின் தொன்மை, செருக்கு காரணமாக, மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் அதை நான் என்றுமே ஏற்கமாட்டேன்.
நான் தமிழன் என தலைநிமிர்ந்து சொல். மொழிக்கு ஒரு இழுக்கு வரும்போது உன் குரல் உயர வேண்டும். எந்த கட்டத்திலும் இந்த தமிழ் மொழியின் அருமையை தூக்கிப்பிடிப்பது நம் கடமை என்பதை மறவாதீர்கள்” என பேசினார்.