தமிழ் மொழியின் பெருமையை மாணவர்களுக்கு எடுத்துரைத்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், மகனுடன் பராசக்தி படம் பார்த்தபோது, மொழி போராட்டம் குறித்து மகனிடம் கேட்டபோது அவமானப்பட்டதாக கூறினார். தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக வளாகத்தில் மாணவர்களின் தமிழ் வழக்காடு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து மாணவர்களிடையே பேசினார்.
அப்போது, 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான மொழிகள் 10 தான் என்றும், ஆங்கிலம் ஆயிரம் ஆண்டுகளை கூட இன்னும் கடக்கவில்லை என்றும் கூறினார். மேலும் 2000 ஆண்டுகள் பழையான மொழிகள் மொத்தம் 5 தான் என்று கூறிய அவர், கீழடி அகழ்வாராய்ச்சியின் படி தமிழ் மொழி ஒன்று மட்டும் தான் 3500 ஆண்டு பழமையானது என்றும் பேசினார்..
தற்போது உள்ள தலைமுறைக்கு தமிழ் மொழியின் உணர்வு தெரியவில்லை என்றும், தமிழ் மொழிக்கான போராட்டம் குறித்தும் தெரியவில்லை என்றும் பேசிய அவர், அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியின் வேள்வியை கடத்த வேண்டிய காலகட்டத்திற்கு வந்துவிட்டோம் என்றும் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மகனுடன் பராசக்தி படத்துக்கு போனேன். படத்தை பார்த்த பிறகு மொழி போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது தெரியுமா என என் மகனிடம் கேட்டேன். அவரிடமிருந்து தெரியாது என்ற பதில் வந்தபோது ரொம்ப அவமானப்பட்டேன். அதை சொல்லிக்கொடுக்காமல் என் கடமையிலிருந்து தவறியதாக என்னை கருதிக்கொண்டேன். அது நாம் அனைவருக்கும் கட்டாயம் தெரிய வேண்டும். ஏனென்றால் எங்கள் பள்ளிபருவத்தில் போராட்டத்தின் அதிர்வுகள் இருந்தது.
அப்போதெல்லாம், பள்ளிகளில் இரண்டாவது மொழி தமிழ் என்பது இயல்பு, திரைப்படங்களில் கூட தமிழ் வசனங்கள் தெறிக்கும், "கொங்குதேர் வாழ்க்கை" என்ற குறுந்தொகை பாடலை நான் கற்றேன், அதற்கான சந்தர்ப்பம் இருந்தது.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் "ஊமைப் பெண்ணல்லவோ" பாடலில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துக்களையும், வல்லின, மெல்லின, இடையினத்தை திரைப்பாடல்கள் மூலம் கற்றுக்கொடுத்தன.
கம்யூனிசம் உள்ளிட்ட சித்தாந்தங்களை அறிந்துக்கொள்ள "மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்" போன்ற தமிழ்ப்பாடல்கள் உதவின.
காலங்கள் மாறின காட்சிகள் மாறின. மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம் என காலகட்டம் வந்தபோது, தமிழ் படித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இந்தி, பிரெஞ்ச், சமஸ்கிருதம் என மாறினார்கள். அது எவ்வளவு பெரிய தப்பு என்பது இன்று தெரிகிறது.
மொழியில் முக்கியம் மதிப்பெண் எடுப்பதில்லை, மொழி நம் மூச்சு, நம் உயிர், நம் அடையாளம். மதிப்பெண் முக்கியமாக போனதால் பள்ளிப்பாடத்திட்டத்தில் வேறு சில மொழிகள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதனால் மாணவர்களின் exposure குறைந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளோம். அதனால் தமிழ் எல்லாவற்றிலும் ஓரடி பின்னே சென்றுள்ளது.
இதற்காக நாம் அடுத்த வேள்வி நடத்த வேண்டிய முக்கிய காலகட்டம் இது. மொழியினை பற்றி பெருமை கொள்ளாது தமிழ்நாட்டில் வாழ்வது தமிழுக்கு இழுக்கு” என பேசினார்.