புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கர்
புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கர் pt desk
தமிழ்நாடு

புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் விபத்தில் மரணம்: ‘உதவித்தொகை வழங்கிடுக’ - பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை

PT WEB

திருநெல்வேலி மாவட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சிக் குழுவினர் நேற்று (23.08.2023) மாலை சந்திரயான் நிலவில் இறங்கும் செய்திக்காக, திருவனந்தபுரம் சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி ஒளிப்பதிவாளர் சங்கர் (33) உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த நிருபர் உள்பட 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மூவருமே, தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்கள். இதனடிப்படையில் இவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவித்தொகை வழங்கவேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்க தலைவர் சு. மதியழகன், செயலாளர் சா. ஜெயப்பிரகாஷ், பொருளாளர் கே. சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இளம் ஒளிப்பதிவாளர் சங்கர், துடிப்பான திறமையான பணியாளர். அவரது அகால மரணம் அதிர்ச்சியைத் தருகிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

இறந்த சங்கரும் காயமடைந்த இதர 3 ஊடகவியலாளர்களும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்கள். நல வாரிய விதிகளின்படி அவர்களுக்கான உதவித் தொகைகளை உடனே நேரில் சென்று வழங்கிட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்

அத்துடன் கூடுதல் சிறப்பு நிதியை ஒதுக்கி வழங்கிடவும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது” எனக்கூறப்பட்டுள்ளது.