பரிசாக கார்கள்
பரிசாக கார்கள் புதியதலைமுறை
தமிழ்நாடு

"சொந்த நிறுவனம் போல் வேலை பார்த்தனர்" ஊழியர்களுக்கு கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம் !

PT WEB

சென்னையில் ஏராளமான தனியார் ஐடி நிறுவனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஏராளமான ஊழியர்கள் வருட கணக்கில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனம் தனது நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது ஐடி நிறுவனத்தின் தலைவர் ஊழியர்களிடம் " உங்களுக்கு என்ன மாடல் கார் வேண்டும் என கேட்டுள்ளார். ஊழியர்கள் தங்களுக்குப் பிடித்த கார்களை தேர்வு செய்துள்ளனர்.

இதனையடுத்து ஊழியர்கள் தேர்வு செய்த 50 கார்களை 50 ஊழியர்களுக்கும் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் இன்று தன்னுடைய ஊழியர்களுக்கு கார்களை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த ஆண்டு தன்னுடைய 50 ஊழியர்களுக்கு 50 கார்களை வழங்கி கவுரவித்துள்ளது. தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஊழியர்களை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உயர்த்தும் "எம்ப்ளாயி ஓனர்ஷிப் ஊழியர்கள் உரிமையாளர்கள் திட்டம்" என்ற பெயரில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஊழியர்களுக்கு கார்கள் வழங்கப்பட்டது. இது ஒரு மகிழ்ச்சியான மற்றும் தொடர்ச்சியான பயணத்தை உறுதி செய்வதற்காக உண்மையான உரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாகும். இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் நிறுவனத்தின் 33 சதவிகித பங்குகளைப் பெறுவார்கள். இதில் 5 சதவிகித பங்குகள் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டத்திலிருந்து ஒன்றிணைந்து வெற்றி பெறுவதற்கான பயணத்தை நோக்கி ஊழியர்களை முன்னேற்றிச் செல்கிறது.

இது குறித்து ஐடி நிறுவன தலைவர் முரளி விவேகானந்தன், "பணியாளர்களைப் பங்குதாரர்களாக உருவாக்கும் முதல் முயற்சியைத் தொடங்கியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து நிறுவனத்தை உருவாக்கினோம். சிறப்பான பணியாற்றும் ஊழியர்களின் திறமையைக் கண்டுபிடித்து அதற்கு உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை அளிப்பது எங்களின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் உந்துதலாக உள்ளது. அவர்களும் சொந்த நிறுவனம் போல நினைத்து அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தார்கள். அவர்களுக்கு இதற்கு முன்பே 100 கார்களை பரிசாக வழங்கினேன் தற்போது 50 ஊழியர்களுக்கு 50 கார்களை வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.