RTI
RTI  PT WEB
தமிழ்நாடு

”நெல்லையில் 3 ஆண்டுகளில் 1448 மைனர் பெண்களுக்கு பிரசவம்" - RTI-ல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

PT WEB

செய்தியாளர் - மருதுபாண்டி

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும், கிராமப்புறங்களில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவிகள், குடும்ப சுழல் காரணமாக மேல் படிப்பைத் தொடர முடியாமல் 18 வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு விதிகளின் படி18 வயது நிரம்பிய பெண்கள் திருமண வயதை எட்டியதாகக் கருதப்பட்டாலும் 13 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட ( மைனர் பெண்கள்) பெண்கள் அதிக அளவு பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சிக்குரிய சம்பவமாக உள்ளது. இதன் காரணமாகப் பெண்கள் இளம் வயதில் குழந்தை பெற்றெடுப்பதால், பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பான விபரங்களைக் கண்டறிய மதுரையைச் சேர்ந்த வெர்ணிகா மேரி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்டுள்ளார். அதில் வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2021,2022,2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 1488 இளம் பெண்களுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளது எனவும், அதில் 1101 பிரசவங்கள் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும்,347 பிரசவங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேலப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சுமார் 88 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக புறநகர்ப் பகுதியில் உள்ள மானூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 44 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் 2000-க்கும் மேற்பட்ட மைனர் பெண்களுக்குப் பிரசவம் நடந்து இருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

சமூக ஆர்வலர் வெர்ணிகா மேரி

இச்சம்பவம் தொடர்பாக பேசிய சமூக ஆர்வலர் வெர்ணிகா மேரி, "தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை இணைந்து பாலியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணத்தைத் தடுக்கும் வகையில் இளம் வயதில் குழந்தை திருமணம் செய்தால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் மாணவ-மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவின் பேரில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு முறையான விழிப்புணர்வு அளிக்க வேண்டும் அப்போது தான் படிப்படியாக இளம் வயது திருமணம் குறையும்" என்றார்.