வருமான வரித்துறை புதியதலைமுறை
தமிழ்நாடு

இபிஎஸ் உறவினர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை!

தமிழகம் முழுவதும் 26 இடங்களில் வருமான வரி சோதனை. ராமலிங்கம் கட்டுமான நிறுவனம் தொடர்பான நிர்வாகிகள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் சோதனை.

PT WEB

அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை.

ஈரோடு பகுதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ராமலிங்க கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனத்தின் நிறுவனர் ராமலிங்கம். இவருக்கு இரண்டு மகன்கள் சந்திரகாந்த் மற்றும் சூரியகாந்த். இவர்கள் இருவரும் நிறுவனத்தின் இயக்குனர்களாக செயல்படுகின்றனர். ராமலிங்கம் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் ஆவார். எடப்பாடி பழனிச்சாமி பெண் எடுத்த இடத்திலேயே, ராமலிங்கம் தனது மகனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

ராமலிங்கம் கட்டுமான நிறுவனம்

ராமலிங்கம் கட்டுமான நிறுவனம் தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள், அரசு கட்டிடங்கள், மின் பகிர்மான திட்டங்கள், நீர் பாசன திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்கள் தொடர்பாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்தான், ஈரோடு அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் சென்னை, கோவை, பெங்களூர் ஆகிய இடங்களில் என மொத்தமாக 26 இடங்களில் சோதனை என்பது காலை முதல் நடத்தப்பட்டது.

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த காலங்களில் வருமான வரி கணக்கு தாக்கல், வரவு செலவு விவரங்கள், மற்றும் அரசு திட்டங்களில் பணப்பரிவினைகள் உள்ளிட்ட அனைத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்தை தவிற, இது தொடர்பான பல்வேறு நிறுவனங்கள் இருக்கும் இடங்களிலும் சோதனை என்பது நடைபெற்றது.

எங்கெல்லாம் சோதனை நடைபெறுகிறது?

சென்னை தியாகராய நகரில் உள்ள விஜயராகவா சாலையில் செயல்படும் கிளை நிறுவனத்தில் மற்றும் சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள SPL infrastructure நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. மேலும் இதுபோன்று ஆறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்தது.

வருமானவரித்துறையின் சந்தேகங்கள்

ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு விவகாரம் இருக்கும் பொழுது பெங்களூரில் 152 கோடி சிக்கிய விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமலிங்கம் கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை கட்டுக்கட்டாக அனுப்பிய விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

மூன்று வங்கிகள் மூலமாக சட்டவிரோதமாக இந்த பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் வருமானவரித் துறை விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் மீண்டும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையானது அடுத்து சில நாட்களுக்கு நடைபெறும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் முடிவில் தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் எவ்வளவு வரியை செய்துள்ளனர் என்பது குறித்தும் முழு தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.