இளையராஜா  முகநூல்
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் விவகாரம்: “நடக்காத செய்தி.. வதந்திகளை நம்ப வேண்டாம்” - இளையராஜா

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலுக்கு சென்ற இசையமைப்பாளர் இளையராஜாவை, உற்சவர் சிலை அமைந்துள்ள அர்த்தமண்டபத்திற்கு வெளியே நிற்க வைத்த சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.

அங்கேஷ்வர்

ஆடித் திருப்பூரப் பந்தலில் நடைபெற்ற விழாவில், இளையராஜா இசையமைத்து பாடிய திவ்ய பாசுரம் இசைக் கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளையராஜா, ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்காக சென்றார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர், ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயரும் இதில் பங்கேற்றனர்.

கோயிலில் இளையராஜாவுக்கு நடந்தது என்ன?

அப்போது ஜீயர்கள், உற்சவர் இடம்பெற்றுள்ள அர்த்தமண்டபத்திற்கு சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார். இதைக் கண்ட ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை வெளியே நிற்குமாறு கூறினர். அதன் பிறகு அர்த்தமண்டபத்திற்கு வெளியே அனுப்பப்பட்ட இளையராஜா, அங்கிருந்தபடியே வழிபாடு செய்ய நேரிட்டது. அவருக்கு பரிவட்டமும் கட்டப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜாவை அர்த்தமண்டபத்திற்குள் செல்ல அனுமதி மறுத்தது சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனிடையே, இதுதொடர்பாக, மதுரை இந்து சமய இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “திருக்கோவிலின் மரபுப் படியும், பழக்க வழக்கப்படியும், அர்த்த மண்டபம் வரை கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர, இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கவில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இளையராஜா, சின்ன ராமானுஜ ஜீயருடன் அர்த்த மண்ட வாசல்படியில் ஏறியபோது, ஜீயரும் கோயில் மணியமும், அர்த்த மண்டபம் முன் தரிசனம் செய்யலாம் என இளையராஜாவிடம் தெரிவித்தார். இதனை இளையராஜாவும் ஏற்றுக்கொண்டு, அர்த்த மண்டபத்தின் முன் நின்று சாமி தரிசனம் செய்தார். சின்ன ராமானுஜ ஜீயர் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தார்” என விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விளக்கம் விருதுநகர் ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.