Congress issues a warning ANI
தமிழ்நாடு

பிரதமராக வேண்டும் என்று நினைத்தால்.. Be careful- காங். விடுத்த எச்சரிக்கை: காங்-தவெக வார்த்தை போர்!

விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கூறி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Praveen Joshva L

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அதிக இடங்களை கைப்பற்றியது. பின்னர் காங்கிரஸ், விசிக, IUML, இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.

கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளிலேயே விஜய் ஆட்சியைப் பிடித்தது இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜயை முன்னிறுத்தி இந்தியாவின் வெவ்வேறு மொழிகளில் செய்திகள் மற்றும் ரீல்ஸ்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதோடு தமிழ்நாட்டின் செயல்படுத்தப்படாத திட்டங்களை கூட, விஜய் செயல்படுத்துகிறார் என்றும், விஜய் பிரதமரானால் நாடு முன்னேறும் என்றும் வட மாநிலங்களில் தீவிர பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தச் சூழலில் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தும், தென்னிந்தியாவில் இருந்தும் ஒரு பாரத பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினார். அவர் முதல்வர் விஜயை குறிப்பிட்டே அப்படிச் சொன்னதாக பல்வேறு அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர்.

அதனை உண்மை என உறுதிப்படுத்தும் விதமாக தவெக அமைச்சர்கள், MLA-கள் ஆகியோர் விஜய் இந்தியாவின் பிரதமராவார் என வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு சமீபத்தில் வெளியான இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் கருத்து கணிப்பில், விஜய் பிரதமராக 9 % மக்கள் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்பட்டிருந்தது.

இது தவெக தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்த காங்கிரஸ் தரப்போ கடும் கலக்கத்தில் உள்ளதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், கருத்து கணிப்பு குறித்து விமர்சித்து அது ஒரு பொய்யான கணிப்பு என்று கூறியிருந்தார். மேலும் அமைச்சர் ராஜேஷ் குமார் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் தனது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில், சிலர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமராக வேண்டும் என்று விரும்பினர்; வேறு சிலர் மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என்று விரும்பினர்; இன்னும் சிலர் நிதிஷ் குமார் பிரதமராக வேண்டும் என்று விரும்பினர். இவர்கள் அனைவரும் பலமுறை முதலமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள்; ஆனால் இந்தியா டுடேயின் கருத்துக்கணிப்பில், வெவ்வேறு காலகட்டங்களில் இவர்களுக்கான ஆதரவு விகிதம் ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது. Be careful... நாம் எதை விரும்புகிறோம் என்பதில் கவனமாக இருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இப்படி தவெகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரின் வார்த்தை மோதல் தீவிரம் அடைந்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.