மூர்த்தி மற்றும் தங்கதமிழ்செல்வன்
மூர்த்தி மற்றும் தங்கதமிழ்செல்வன் புதியதலைமுறை
தமிழ்நாடு

”தேனியில் தோற்றால் அமைச்சர் பதவியே வேண்டாம்” - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி ஆவேசம்

யுவபுருஷ்

மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இதற்கிடையே, திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தீவிரமாக பரப்புரை செய்து வருகின்றனர். இதற்கிடையே, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அறிமுக கூட்டம் பத்திரபதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.முர்த்தி, “தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும்.

40 தொகுதிகளையும் திமுக கூட்டணிதான் வெற்றிபெறும். தேனி நாடாளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றிபெற செய்யாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியையும், மாவட்டச் செயலாளர் பதவியையும் ராஜினமா செய்வேன்” என்று ஆவேசமாக பேசினார்.

மேலும், “உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும். கட்சிக்கு சிலர் துரோகம் செய்து வருகின்றனர். சோழவந்தான் தொகுதியில் நான் உழைத்ததால்தான், தற்போது அமைச்சராக உயர்ந்துள்ளேன்.

எனவே, கட்சியினர் துரோகம் செய்யாமல் உண்மையாக வேட்பாளர்களுக்கு உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்” என்று பேசினார். கடந்த தேர்தலைப்போலவே இந்த தேர்தலிலும் மக்களவைத் தேர்தல் வெற்றியை தன்வசப்படுத்த திமுக முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.