பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவர்
பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவர் புதியதலைமுறை
தமிழ்நாடு

காரைக்குடி | மனைவியை கொலைசெய்துவிட்டு கணவனும் விபரீத முடிவு; காப்பாற்ற சென்ற மகனுக்கு 80% தீக்காயம்!

PT WEB

செய்தியாளர் - நாசர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்திய லிங்கபுரம் 2வது வீதியில் வசித்து வந்தவர்கள் தங்கராஜ் (60) - லதா தம்பதி. கைத்தறி நெசவாளியான தங்கராஜ், எங்கும் செல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். IT கம்பெனி ஊழியரான இவரது மகன் நவீனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், தன்னை சரியாக கவனிப்பதில்லை என்று மனைவி, மகன் மீது ஆத்திரத்தில் இருந்ததோடு, தன்னை சரியாக கவனிப்பதில்லை என்றும், உணவு கூட கொடுப்பதில்லை என்றும் அக்கம் பக்கத்தினரிடம் முதியவர் அடிக்கடி வருத்தத்துடன் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஏற்கனவே கேனில் தயாராக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, உறங்கிக்கொண்டிருந்த மனைவி மீது ஊற்றி அவருக்கு தீ வைத்துள்ளார். பின் தன் மீதும் பற்ற வைத்து கொண்டுள்ளார். இருவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு எழுந்து வந்த மகன் நவீன், அவர்களை காப்பாற்ற முயன்றபோது, அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

தங்கராஜ் - லதா தம்பதியினர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவீனை போலீசார் மீட்டு காரைக்குடியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடலை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீ விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.