செய்தியாளர்: சுதீஷ்
சமீபகாலமாக விவாகரத்து தொடர்பான செய்திகள் அதிகளவில் வருவதை நம்மால் காணமுடிகிறது. ‘என்ன இருந்தாலும் இது இருவருக்கு இடையேயான தனிப்பட்ட விஷயம்’ என்றே நாம் அதை கடந்திருப்போம். ஆனால் அப்படி கடக்க முடியாத ஒரு விவாகரத்து வழக்கு, கோவையில் நிகழ்ந்துள்ளது.
அச்சம்பவத்தின்படி, கோவையில் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக பணத்தை சில்லறை காசுகளாக மூட்டைக்கட்டி கொண்டு வந்துள்ளார் அவரின் கணவர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது? பார்க்கலாம்... கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி, குடும்ப பிரச்னைக்காக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
சில காலமாகவே வழக்கு விசாரணையும் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில்தான், கணவன் தரப்பிலிருந்து இடைக்கால ஜீவனாம்சம் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றமும், இடைக்கால ஜீவனாம்சமாக, ரூ 2 லட்சமும் ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இதற்கு முதற்கட்டமாக ரூ.80,000 ஆயிரத்தை செலுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த பணத்தை நீதிமன்றத்தில் கொடுக்க வந்த அந்த நபர், நோட்டுகளாக கொண்டு வராமல், 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்களாக மொத்தமாக 80,000 ரூபாயையும் சில்லறை காசுகளாக்கி சுமார் 20 மூட்டைகளில் மூட்டைக்கட்டி எடுத்து வந்துள்ளார்.
நீதிமன்றத்தில் அவர் சாக்குப்பைகளுடன் வந்த நபரை கண்ட வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் என அனைவரும் முதலில் அதிர்ந்துள்ளனர். பின் தான் கொண்டு வந்த 80,000 ரூபாய் சில்லறை நாணயங்களை நீதிபதி கஜரா ஆர்.ஜிஜி முன்னிலையில் அவர் கொடுக்க, இதனை கண்ட நீதிபதியும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், மனைவி தரப்பில் சில்லறை காசுகளை ஏற்க மறுத்ததால், “இப்படி நாணயங்களை மூட்டையில் கொண்டு வருவதை ஏற்க முடியாது. இந்த தொகையை ரூபாய் நோட்டாக மாற்றி ஜீவனாம்சம் கொடுங்கள்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
அந்த நபர் நாணய மூட்டைகளை காரில் எடுத்து வைப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளஙகளில் பேசுபொருளாக மாறியுள்ளது.