snake bite
snake bite puthiathalaimurai
தமிழ்நாடு

தருமபுரி: முதியவரை கடித்த பாம்பு.. சாலை இல்லாததால் டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்

யுவபுருஷ்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஹள்ளி ஊராட்சியில் ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மூன்று மலை கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அடர்ந்த மலை கிராமத்தில், மலை மீது உள்ள இந்த மூன்று கிராமங்களுக்கும் போதிய சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.

இதனால் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டும். இந்நிலையில் இன்று அலகட்டு கிராமத்தை சேர்ந்த சித்தபெலான்(75) என்ற முதியவர், விவசாய நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக, வயலில் இருந்த பாம்பு முதியவரை கடித்துள்ளது. இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த முதியவர் பாம்பு கடித்ததை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மருத்துவமனைக்கு சாலை போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், மூங்கிலில் போர்வையால் டோலி கட்டியுள்ளனர். அப்பொழுது பாம்பின் விஷம் உடலில் பரவாமல் இருக்க முதியவர், பாம்பு கடித்து இடத்தில் சுண்ணாம்பு வைத்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து, டோலி கட்டிய பிறகு, அதில் முதியவரை அமர வைத்து உறவினர்கள் அவரை தூக்கிச் சென்றனர். மலை இறங்கிய பிறகு, அடிவாரத்திலிருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

சாலை வசதி வேண்டி, மலைவாழ் மக்கள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில், இன்னும் சாலை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவ சேவைக்கு செல்ல டோலி கட்டி எடுத்துச் செல்லும் அவலம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.