ooty hill train pt desk
தமிழ்நாடு

கனமழையால் தடைபட்டிருந்த ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவக்கம்!

கனமழை எச்சரிக்கையால் நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

PT WEB

செய்தியாளர்: இரா.சரவணபாபு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயிலில் பயணம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ooty hill rail

இதையடுத்து மிக கனமழை பெய்தால் மலை ரயில் பாதையில் மண் சரிவுகள் ஏற்படலாம் என்பதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு (டிச.2 மற்றும் டிச.3) ஆகிய 2 தினங்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது.

தற்போது மழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.