வங்கக்கடலில் வலுப்பெற்றது புயல் சின்னம் web
தமிழ்நாடு

வங்கக்கடலில் புயல் சின்னம் | 55 கிமீ வேகத்தில் சூறைக்காற்று.. பேரிடர் மீட்புக்குழு தயார்!

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

Rishan Vengai

வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை

மேலும் திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் 90 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர்..

இன்று கரையை கடக்கும் புயல் சின்னம்..?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையில் இன்று கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கக்கூடும் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இதனிடையே, தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலைஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.