Rain  PT
தமிழ்நாடு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று, நாளை மற்றும் அதற்கடுத்த நாளும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

செப்டம்பர் 16, 17 தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

A low-pressure area formed over the Bay of Bengal

இன்று (செப்டம்பர் 15) கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாளை (செப்டம்பர் 16) கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

low pressure area

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34–35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26–27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.