vijay met Kader Mohideen X
தமிழ்நாடு

’விஜய் புதிய சகாப்தத்தை உருவாக்கிவிட்டார்..’ DMK உடனான கூட்டணி முறிந்துவிட்டதா..? IUML தலைவர் பதில்!

திமுக உடன் நீண்டகால உறவில் இருந்துவரும் ஐயூஎம்எல் கட்சி முதல்முறையாக ஆளுங்கட்சியின் அமைச்சரவையில் பங்கேற்று அதிகாரத்தை பெற்றுள்ளது.

PT WEB

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்கள் பெற்று, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. ஐயூஎம்எல் எம்.எல்.ஏ. ஷாஜகான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்று, அந்தக் கட்சி தமிழக ஆளுங்கட்சியின் அமைச்சரவையில் முதல் முறையாக இணைந்தது.

2026 தமிழக சட்டபேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும் ஆட்சிமையக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்ததுது. காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு அளித்திருந்த நிலையில், தவெகவுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருவதாகவும் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை எனவும் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மே 10ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

vijay

மேலும் மே 21ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்தசூழலில் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என 2 இலாகாக்களுக்கு அமைச்சர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

தமிழக வெற்றி கழகத்தின் விருப்பத்தின் காரணமாக விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறும் என உறுதிப்படுத்தியது. இதனையடுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஷாஜகான் மே 22 அன்று சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

vijay met Kader Mohideen

இதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி ஆளுங்கட்சி அமைச்சரவையில் இணைந்து அதிகாரத்தை பெற்றுள்ளது.

இது குறித்து பேசியிருக்கும் அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன், “தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி அமைச்சரவை மரபு கிடையாது. தவெக அதைத் தொடங்கியிருக்கிறது. இது இத்துடன் நிற்காது, இந்த மரபு வருங்காலத்திலும் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விஜய் புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், திமுக கூட்டணியில் இருந்து வெளியெறிவிட்டீர்களா என்ற கேள்விக்கு, “தவெக அமைச்சரவையில் நாங்கள் இடம் பெற்றிருக்கலாம், அதனாலே திமுகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று நாங்கள் சொல்லவில்லை. தேர்தல் காலத்தில் நாங்கள் முடிவை சொல்வோம்” என்று கூறியுள்ளார்.

அத்துடன் திமுக-அதிமுக கூட்டணி பேசப்பட்டதா என்ற கேள்விக்கு, “அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டுமென்ற கோரிக்கை உள்ளுக்குள் பேசப்பட்டது; திமுக சார்பாக எங்களிடத்தில் சொல்லப்பட்டது” என வெளிப்படுத்தியுள்ளார்.